CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் விழிப்புடனிருத்தலும் 2

ஜெபமும் விழிப்புடனிருத்தலும் 2

புதிய ஏற்பாட்டில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் விழிப்பு (Watch) என்பதைக் குறிக்கிறது. முதல் ‘அர்த்தம்’, ‘தூங்காமலிருப்பது’ ‘மனம் விழித்திருப்பது’ ஆகியவை. அதாவது, சுறுசுறுப்பாயிருப்பது, எச்சரிக்கையாயிருப்பது, மாறாமலிப்பது, விழிப்பாயிருப்பது ஆகியவைகள் சேர்ந்து இருப்பதாகும். இரண்டாவது அர்த்தம், ‘முழுவதும் விழிப்பாயிருப்பது’ – கவனம், அக்கரை, செயல்பாடு, எச்சரிக்கையாயிருப்பது இல்லையெனில் கவனமின்மை அல்லது சோம்பல் மூலம் அழிவைக் கொண்டு வரும் பேராபத்து திடீரென்று உருவாகிவிடும். மூன்றாவது அர்த்தம், ஆவியில் அமைதலுடன் இணைந்து இருப்பது, உணர்ச்சிவசப்படாத நிலை, மோசமான சூழ்நிலைகளினாலும் தொடப்படாத நிலை; எல்லாவிதமான  குழிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் எச்சரிக்கையாயிருப்பது என்பவைகளாகும்.

இந்த மூன்று விளக்கங்களும் பரிசுத்த பவுலினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அவைகளில் இரண்டு விளக்கங்கள் ஜெபத்துடன் சம்பந்தப்படுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீவிரப்படுத்தப்பட்ட விழிப்பு, ஜெபத்துக்குத் தேவையான ஒன்றாகும். விழிப்பாயிருப்பது ஆவிக்குரிய முழு மனிதனையும் பாதுகாத்து மறைத்து ஜெபத்தில் அவனைத் தகுதியாக்க வேண்டும். ஆயத்தமற்று அல்லது விழிப்பற்று இருப்பது போன்றவைகள் ஜெபத்துக்கு மரணம் போன்றதாகும்.

எபேசியர் நிருபத்தில் தொடர்ந்து விழிப்பாயிருக்கிற பணிக்கு பவுல் தனிச்சிறப்பளிக்கிறார். “…..மனஉறுதியோடும்……வேண்டுதலோடும்……..விழித்துக் கொண்டிருங்கள்”                            (எபேசியர் 6:18) என்று கூறுகிறார். அவர் கூறுகிறார் விழித்திருங்கள் விழித்திருங்கள்! “மேலும் நான் உங்களுக்குச் சொல்லுவதை உங்களெல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.”

தன்னுடைய ஆவிக்குரிய எதிரிகளை தோற்கடிப்பதற்கு ஒருவர் செலுத்த வேண்டிய விலை, தூக்கமில்லாத விழிப்பாகும். அவன் எப்போதும்  “……எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1பேதுரு 5:8) ஓநாய் தன்னுடைய ஆடுகளை விழுங்கிவிடாதபடி ஒரு மேய்ப்பன் எவ்வாறு கவனத்துடன் விழிப்பாயிருக்க வேண்டுமோ, அதுபோல கிறிஸ்தவ இராணுவ வீரனும் எப்போதும் அவனுடைய கண்களை நன்றாகத் திறந்து வைத்திருக்க வேண்டும். கவனம், கண்விழிப்பு, குதிரைமேல் அமர்ந்து செய்யும் காவல் ஆகியவை ஜெபத்துக்குப் பிரிக்கமுடியாத நண்பர்களும், பாதுகாவல்களுமாகும். கொலோசெயருக்குப் பவுல் எழுதும்போது மக்களிடம் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2) என்று கூறுகிறார்.

ஒரு பெரிய போருக்கும், அதில் வெற்றி பெறுவதற்காகத் தூங்காமல் விழித்திருப்பதற்கும், இடைவிடாத ஜெபத்துக்கும் தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுக்க வேண்டும் என்கிற பாடங்களையும் எப்போது கிறிஸ்தவர்கள் முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள்?

“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்…… ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1பேதுரு 5:8)

தேவனுடைய சபை, போர் மனப்பான்மையைத்  தருகிற ஒன்று; அதின் யுத்தம், தீயசக்திகளுக்கு எதிரானது. தேவஜனங்கள் தேவனுடைய ராஜ்யத்தை பூமியில் நிறுவுவதற்காகப் போராடுகிற ஒரு சேனை. அவர்களுடைய நோக்கம் சாத்தானுடைய மேலாட்சியை நிர்மூலமாக்கி அந்த அழிவின் மேல் “…….நீதியும் சமாதானமும், பரிசுத்தஆவியினாலுண்டாகும் சந்தோஷமாயிருக்கிற….” (ரோமர் 14:17) தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவதாகும்.

போரிடுகிற இந்த இராணுவம் சிலுவை வீரர்களைக் கொண்டது. அதனுடைய தற்காப்புக்குத் தேவனுடைய போர்க்கவசம் தேவைப்படுகிறது. மொத்தத்தையும் முடிசூட்டுகிற ஜெபம் இவைகளோடு சேர்க்கப்பட வேண்டும்.

“அவருடைய பெரிய வல்லமையில் நில்,

அவருடைய அனைத்து வலிமையைப் பெற்றுக்கொள்,

ஆனால் போர்புரிய உனக்குத்தேவை, தேவனுடைய சர்வாயுதவர்க்கம்.”

ஜெபம் மிகவும் எளிமையானது. அது வெளிப்படையான ஒரு கடமை; நமக்கு அவசியமான தேவைகளே ஜெபத்துக்கு அழைக்கிறது; வடிவமைக்கிறது. அதன் முக்கியத்துவம் நிச்சயமானது. கிறிஸ்தவ இராணுவ வீரனுடைய வாழ்க்கையின் முழுமூச்சு ஜெபம்தான். கிறிஸ்தவ இராணுவ வீரனுடைய முழு வாழ்வும் – நோக்கம், சிந்தனை, ஈடுபாடு, செயல் அனைத்தும் – ஜெப வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. அவனுக்கு வேறு எல்லாம் இருந்தாலும், ஜெபமில்லாதிருப்பது கிறிஸ்தவ இராணுவ வீரனுடைய வாழ்க்கையை தெளிவற்றதாகவும், பயனற்றதாகவும் செய்து அவனது ஆன்மீக எதிரிகளுக்கு அவனை இரையாகவும் ஆக்கிவிடும்.

வாழ்க்கையில் ஜெபத்துக்கு ஒரு முக்கியமான இடத்தைத் தரவில்லையென்றால் கிறிஸ்தவ அனுபவம்சாரமற்றதாகவும், கிறிஸ்தவ செல்வாக்கு உலர்ந்து போனதாகவும் இருக்கும். ஜெபமில்லாமல் கிறிஸ்தவக் கிருபைகள் காய்ந்து மாய்ந்து போகும். இன்னும் சொல்லப்போனால், ஜெபமில்லையென்றால் பிரசங்கிப்பது, கூர்மையில்லாததும் வீணுமாயிருக்கும். ஜெபமில்லாத சுவிசேஷம் தன்னுடைய இறக்கைகளையும் அரைக்கச்சையையும் இழுக்கிறது. இயேசுவே ஜெபத்துக்கு சட்டத்தை அளிப்பவர்; பவுல் அவருடைய ஜெப அப்போஸ்தலர். இருவரும் அதனுடைய முதன்மையை முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றனர்; அதனுடைய இன்றியமையாமையை தங்களுடைய செயல்முறை மூலமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றனர். அவர்களுடைய ஜெபப்பகுதிகள் அனைத்து இடங்களையும், நேரங்களையும், காரியங்களையும் உள்ளடக்கிக் கொள்ளுகின்றன. கிறிஸ்தவ இராணுவ வீரன் ஜெபத்தின் வல்லமையில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜெபத்தை நம்புவது அல்லது கனவு காண்பது எவ்வாறு? தேவனுடைய கவசத்தோடு எல்லா நேரங்களிலும் காலங்களிலும் “ஜெபத்தில் விழிப்புடனிருந்தால்” அவன் எப்படித் தோற்றுப்போக முடியும்?