CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தழும்புள்ள கை

தழும்புள்ள கை

வில்லியம், அவனுக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது. ஈராண்டுகள் மனைவியோடு வாழ்ந்தான். அதற்குள் தன் அருமை மனைவியை இழந்தான். அவனது அருமைப் புதல்வனும் மரித்துப் போனான். துயரத்தில மூழ்கினான். கடவுளை இகழ்ந்தான். கடந்த பத்து ஆண்டுகளாக அவன் ஆலயம் சென்றதே கிடையாது.

.

 பெக்கிப் பாட்டியின் வீடு ஓரிரவு தீப்பற்றி எரிந்தது.மிகவும் சிரமப்பட்டு பெக்கியைக் காப்பாற்றினார்கள். திடீரென மாடியில் ஒரு அழுகுரல் யாவரையும் கலங்க வைத்தது. ஆம், அது குழந்தை டிக்கி. பெக்கியின் பேரன். தாய் தந்தையற்ற அனாதை. தீயை அணைக்கும் சந்தடியில் தூங்கிக் கொண்டிருந்த டிக்கியை யாவரும் மறந்து விட்டனர். சூழும் நெருப்பு டிக்கியை எழுப்பியது. அவன் கதறினான். எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை, மாடிக்குச் செல்லும் படிக்கட்டு எரிந்து சரிந்து விட்டது. டிக்கி கைவிடப்பட்டான்.

.

கூட்டத்தின் மத்தியில் வில்லியமும் நின்று கொண்டிருந்தான். குழந்தைக்காகப் பரிதபித்தான். எப்படியாவது டிக்கிக்கு விரைவில் உதவத் தீர்மானித்தான். மாடியில் இருந்து கீழே இறங்கும் இரும்புக் குழாய் ஒன்று அவன் கண்ணில் பட, ஒரே தாவில் சாடி, குழாயைப் பிடித்து ஏறினான். வாரியெடுத்தான்  டிக்கியை. வலது கரம் டிக்கியை அரவணைக்க, இடது கையால் குழாயைப் பிடித்து கீழே வந்து சேர்ந்தான். சேர்ந்த சில நிமிடங்களில் குழாயும் மாடியும் சரிந்தது.

.

டிக்கிக்கு எவ்வித காயமும் சேதமும் இல்லை. ஆனாலும் வில்லியத்திற்கோ, இரும்புக் குழாய் மிகவும் சூடேறியிருந்ததால், இடது கை ஆழமாய் வெந்து போனது. நாளடைவில் காயம் ஆறின போதிலும், ஆழமான தழும்பு நிலைத்துவிட்டது. இந்த அதிர்ச்சியில் பெக்கிப் பாட்டி சீக்கிரத்தில் மரித்துப் போனாள். டிக்கியைக் கவனிக்க எவரும் இல்லை. அது குறித்து மூப்பர்கள் கூடி ஆலோசித்தனர்.

.

டிக்கியை வளர்க்கும் பொறுப்பை ஏற்க இருவர் முன் வந்தனர். கண்ணியமுள்ள ஜேம்ஸ் ஆறுதலளிப்பான் என்று நம்பி முன்வந்தனர். இருவரையும் மூப்பர்கள் பாராட்டினர். உயிக் காத்த வில்லியத்திற்கே அதிக உரிமை என்பதை யாவரும் உணர்ந்த போதிலும் வில்லியத்தின் நாத்திகக் கொள்கையினால் டிக்கியின் ஆன்மா நட்டமடையுமே என்று வருந்தினர்.

.

அவர்களால் ஒரு முடிவுக்குக் கூட வர முடியவில்லை. இறுதியாக “நீங்கள் ஏன் இக்குழந்தையை வளர்க்க விரும்புகிறீர்கள்?” என்று அவர்களையே விளக்கம் கேட்டத் தீர்மானித்தனர். ஜேம்ஸ் எழும்பி, “ஒரே மகனை இழந்தோம். வெற்றிடத்தை நிரப்ப டிக்கியை விரும்புகிறோம். குழந்தையை வளர்க்க ஒரு தாய் வேண்டுமே! வில்லியம் தனியாள் தானே! என் மனைவி குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பாள். கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திலும் அவனை வளர்ப்பாள்” என்றார். அவருக்குப் பிறகு வில்லியம் முன்னால் வந்தான். ஆனால் அவன் ஏதும் பேசவில்லை. தன் இடது கையின் கட்டுக்களை அகற்றினான். ஆழமான தழும்புகளை யாவரும் காணத்தக்கதாக கையை உயர்த்திக் காட்டினான். அமைதியாக நின்றான்.

.

ஒரே அமைதி. கண்கள் கலங்கின. முடிவில் வோட் எடுக்கப்பட்டது. வில்லியத்திற்கே அதிக வாக்குகள். அதுவே நீதியான முடிவு என்று யாவரும் மகிழ்ந்தனர். தழும்புள்ள கையைவிட சிறந்த வேறு தகுதியில்லை என்பதை யாவரும் உணர்ந்தனர். வில்லியத்தின் வாழ்வில் ஒரு புதுத்திருப்பம், மறமலர்ச்சி. ஆர்வத்தோடும் கரிசனையோடும் டிக்கயை வளர்த்தான். தாயும் தந்தையுமாய் விளங்கினான்.

.

டிக்கியும் வில்லியத்தை மிகவும் நேசித்தான். சிறந்த பாலனாக வளர்ந்தான். வில்லியத்தின் கதைகளை ஆவலோடும் உணர்ச்சியோடும் கேட்பான். தழும்புள்ள கையை மீண்டும் மீண்டும் முத்தம் செய்வான். “என்னைக் காப்பாற்றிய கை” என்று அன்பு வார்த்தைகைளைப் பொழிவான்.

.

 “டாடி, ஜேம்ஸ் என்னைக் கொண்டு போக வருவாரோ?” என்று பயத்துடனே கேட்பான். “வரமாட்டார் மகனே, நீ என்னுடையவன்” என்பான் வில்லியம். ஒருநாள் டிக்கியை ஒரு பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றான் வில்லியம். அறையொன்றில் அழகான அநேகப் படங்கள், ஒவ்வொன்றையும் டிக்கிக்கு விளக்கிக் காட்டினான் வில்லியம். கடைசியில் ஒரு படம். படத்தின் கீழ்: “உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார்” என்று எழுதியிருந்தது. டிக்கி அதை வாசித்தான் மேலும் அறிய விரும்பினான்.

.

டிக்கி      :இந்தக் கதையை விளக்குங்கள் டாடி.

.

வில்லி    :இந்தக் கதை வேண்டாம் மகனே.

.

டிக்கி      :ஏன் டாடி வேண்டாம்?

.

வில்லி    :அந்தக் கதையை நான் நம்பவில்லை.

.

டிக்கி      :அந்த ஜேக் கதையையுந்தான் நீங்கள் நம்பவில்லை என்கிறீர்கள். ஆனாலும் சொன்னீர்கள்! இதையும் சொல்லுங்க டாடி.

.

வேறு சாக்குப் போக்குச் சொல்ல முடியாததால், வில்லியம் அந்தக் கதையை சொன்னான். தோமாவின் நிலையில் தன்னையும், இயேசுவின் இடத்தில் தன் தந்தையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தான் டிக்கி. மிகவும் பொருத்தம் என்று உணர்ந்தான்.

.

டிக்கி      :உங்களையும் என்னையும் போலவே இருக்கிறது டாடி?

.

வில்லி    :இருக்கலாம்

.

டிக்கி      :நீங்கள் உங்கள் தழும்பைக் காட்டியது போலவே இயேசுவும் காட்டியிருக்கிறார். தழும்பைப் பார்த்ததும் “ தான் இயேசுவுக்கு சொந்தம்” என்பதைத் தோமா நம்பியிருப்பானல்லவா?

.

வில்லி    :இருக்கலாம்.

.

டிக்கி      :இயேசு துக்கத்தோடு சொல்கிறது போல் தோன்றுகிறதே! தோமா நம்பாததால் அப்படியோ?

.

வில்லி    :மௌனமாய் இருந்தான்.

.

டிக்கி      :நானும் நம்பாதிருந்தால் உங்களுக்கு ரொம்பக் கவலையாய் இருந்திருக்குமல்லவா?

.

வில்லி    :ஆம், மகனே.

.

டிக்கி      :நானும் தோமாவை் போல இருந்திருந்தால், ஜேம்ஸ் என்னைக் கொண்டு போயிருப்பாரோ?

.

வில்லி    :இல்லை மகனே, நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் உன்னைக் காப்பாற்றியது நான்தானே!

.

டிக்கி      :டாடி, நான் உங்களை நம்புகிறேன்; உங்களைத் துக்கப்படுத்தவேமாட்டேன்.

.

மீண்டும் அந்தக் கதையைச் சொல்ல வைத்தான், டிக்கி. வில்லியத்தின் சிந்தைனைகள அவனையே குற்றப்படுத்தின. நிம்மதியற்ற நிலையில் நித்திரைக்குச் சென்றான். இரவில் ஒரு கனவு: தழும்புள்ள கரத்தை ஒருவர் வில்லியத்திடம் நீட்டுகிறார். “உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார்” என்று சொல்கிறார். காலையில் டிக்கியின் அன்பான முத்தங்கள் வில்லியத்தை எழுப்பின. இரவின் கனவுகளும், முந்தின பகலின் உரையாடல்களும் அவனது கடின உள்ளத்தை கரைத்துவிட்டது. தாமதமின்றி, தனக்காகக் காயப்பட்ட இயேசுவின் கரங்களில் தன்னை ஒப்புவித்தான், உலகம் தரக்கூடாத சமாதானத்தையும் பெற்றான்.

.

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)