CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் அற்புத அழைப்பு

கிறிஸ்துவுக்குள் அற்புத அழைப்பு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

அற்புத அழைப்பு:

ஆண்டவர் மோசேயைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது முற்றிலும் அற்புதமானது. முட்செடி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் வெந்து போகவில்லை. அதுவும் ஒரு அற்புதசாட்சி. மோசே மிகவும் ஆர்வம் கொண்டவனாய் அந்த அற்புதக்காட்சியினருகே நெருங்கி வந்தான். அதன் மூலமாய் ஆண்டவர் அவனுக்கு அவனுடைய எதிர்கால ஊழியம் ஒரு அற்புத அடையாள ஊழியம் என்று காட்டினார்.

ஆண்டவருடைய அற்புதம் செய்கிற வல்லமை இன்றும் மக்களைக் கிறிஸ்துவண்டை இழுத்துக்கொண்டிருக்கின்றது. மோசே ஒரு அற்புதத்தின் மூலமாக அற்புதங்களுக்காக அழைக்கப்பட்டான். அவன் பார்வோனிடம் பிரசங்கம் பண்ண அழைக்கப்படவில்லை. தேவனுடைய வல்லமையைக் கொண்டு ஜனங்களை அவன் கையிலிருந்து பிடுங்கி எடுக்க அழைக்கப்பட்டான். மோசே ஒருவேளை பார்வோனின் அரண்மனையிலிருந்தபோது வாக்கு வல்லவனாயிருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுதோ எல்லாவற்றையும் இழந்து திக்குவாயும், மந்தநாவுமுள்ளவனாய் இருந்தான். (அப் 7:22, யாத் 4:22) இப்போது அவனுடைய ஒரே நம்பிக்கை ஆண்டவருடைய அற்புத வல்லமைதான்.

பரிசுத்த அழைப்பு:

மோசே இந்த அற்புதக்காட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டபொழுது ஆண்டவர் இந்த இடம் பரிசுத்த பூமி, நீ கிட்ட சேர வேண்டாம் என்றார். இந்த எச்சரிப்பின் மூலம் ஆண்டவர் அவனுடைய ஊழியம் துவக்கம் முதல் இறுதிவரை பரிசுத்தமானது என்று அவனுக்கு உணர்த்தினார்.

அற்புத ஊழியம் என்பது பரிசுத்தமான அழைப்பும்கூட. மோசேயும் பயந்து அந்த இடம் அவ்வளவு பரிசுத்தமாயிற்று. தேவ பிரசன்னம் வந்த மாத்திரத்தில்தானே உங்கள் வாழ்க்கையும் கூட பரிசுத்தமாக மாறிவிடுகிறது.

உங்களுடைய வல்லமை ஊழியம், பரிசுத்த ஊழியம். தீர்க்கதரிசனம் பரிசுத்தமானது, அந்நியபாஷை பேசுதல் பரிசுத்தமானது. இரட்சிப்பு பரிசுத்தமானது, விடுதலை பரிசுத்தமானது, சுகம் பரிசுத்தமானது. எல்லா வெளிப்பாடுகளும் பரிசுத்தமானது. பிரசங்கம் பரிசுத்தமானது, ஆராதனை பரிசுத்தமானது. உங்களுக்குள் இருக்கிற தேவப்பிரசன்னம் உங்களுடைய முழு ஆளுமையையும் பரிசுத்தப்படுத்தி ஆண்டவருடைய அற்புத வல்லமை உங்களிலிருந்து பாய்ந்து ஓடும்படி செய்யும். தேவனுடைய பரிசுத்த வல்லமை உங்களுடைய பரிசுத்தமுள்ள கரங்களின் வழியாகவே பாய்ந்து சென்று சுகத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய பரிசுத்த வார்த்தை உங்கள் பரிசுத்த நாவின் வழியே புறப்பட்டுச்சென்று அநேகரது வாழ்வை மாற்றுகிறது.

கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையும் பரிசுத்தமாயிருக்கிறீர்கள். ஒரு அற்புத ஊழியராய் நீங்கள் பரிசுத்தமாய் வாழாவிட்டால் தேவனுடைய  பட்சிக்கிற அக்கினியோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அது கிட்டத்தட்ட உயர் மின்னழுத்தம் பாய்கிற தேவனுடைய மின்சார வல்லமையைத் தொடுவது போன்றது. ஆகவேதான் மோசேயை அழைத்த அதே தேவன் அவனை அழிக்கவும் முற்பட்டார். சமயோசிதமாக சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து விருத்தசேதனம் செய்து மோசேயின் உயிரைக் காப்பாற்றினாள். (யாத் 4:24-25) தேவனுக்கு ஒரு அற்புத ஊழியன் தேவை என்பதற்காகவே அவர் தன்னுடைய ஒழுக்க நியதிகளோடு, கொள்ளைகளோடும் சமரசம் செய்துகொண்டு தரம் தாழமாட்டார்.

உடன்படிக்கையின் அழைப்பு:

ஆண்டவர் மோசேயிடம் தன்னை ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மோசே உடனே ஆண்டவர் தன்னுடைய முற்பிதாக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தான். தன் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவேண்டிய தேவனுடைய உடன்படிக்கைப் பங்காளி நான்தான் என்று அவன் அறிந்தான். அப்படியே நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய புதிய உடன்படிக்கையின் பங்காளராகிவிட்டீர்கள். உங்களுடைய அழைப்பு தேவனுடைய உடன்படிக்கையையே முற்றிலும் சார்ந்தது. மலைகள் விலகலாம், பர்வதங்கள் நிலைபெயர்ந்து போகலாம். ஆனால் அவருடைய கிருபையின் உடன்படிக்கை உங்களை விட்டு எப்பொழுதும் விலகாது. தேவனுடைய அழைப்பு தேவனைப்போலவே வல்லமையானது.

தேவையின் அழைப்பு:

இஸ்ரவேலருடைய உடனடித்தேவையே மோசேயினுடைய அழைப்பாக மாறிவிட்டது. இஸ்ரவேலருடைய கூக்குரல் தேவனை எட்டி அவர்களை விடுவிக்க அவர் இறங்கிவரும்படி செய்தது. இங்கு ஆண்டவர் தன்னுடைய இதயக் கதறலை தன்னுடைய ஊழியக்காரராகிய மோசேயோடு பகிர்ந்து கொண்டார். அவர் ஜனங்களினுடைய உபத்திரவத்தைப் பார்த்து அவர்களுடைய கூக்குரலைக் கேட்பார். (யாத் 3:7) அந்த மக்களின் துன்பங்களே மோசேயை அசைக்க போதுமானதாயிருந்தது. அவன் இனி சொந்த தேவைகளுக்காகவும், விருப்பங்களுக்காகவும் வாழ முடியாது. அந்த ஜனங்களுடைய கூக்குரலே மோசேக்கு தேவ சத்தமாக மாறிவிட்டது.

கிறிஸ்துவுக்குள் திரள் கூட்டத்தின் தேவை நிறைந்த கூக்குரல் உங்களை அவருக்காகப் பணியாற்ற அழைக்கின்றது. இது உங்களுடைய சொந்தத் தேவைகளுக்காகவே வாழ்ந்து மரிக்கிற காலம் இல்லை. தேவனுடைய அழைப்பு உங்கள் மேல் இருக்கிறது. தேவனுடைய உடன்படிக்கை உங்களோடு இருக்கிறது. தேவனுடைய அற்புத வல்லமை உங்களுக்குள் இருக்கிறது. அவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி இருக்கிறார். இன்னும் நீங்கள் ஏன் இன்னுமொரு அழைப்புக்காக அமர்ந்து காத்திருக்க வேண்டும்? உங்களால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை உங்கள் முழு பெலத்தோடு இப்போதே செய்யத்துவங்குங்கள்.

அன்பார்ந்தவர்களே, நீங்கள் பயப்படத்தேவையில்லை, உங்கள் மேலிருக்கிற வல்லமையான அற்புத ஊழியம் அபிஷேகம் உங்களைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ளும். உங்களுக்குள்ளிருந்து வெளிப்படுகிற விடுதலையின் வல்லமை உங்களையும் விடுவிக்கும். அவருடைய பிரசன்னம் ஏற்கனவே உங்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறது. எளிமையாய் அந்தப் பரிசுத்தத்தை அப்படியே பராமரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளிருந்து அற்புத வல்லமை தங்குதடையின்றி பாயட்டும்.

ஆண்டவரே,

என்னை உண்மையுள்ளவன் என்று எண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினீர். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் உம்முடைய கிருபை என்னை விட்டு விலகாமலும் உமது சமாதானத்தின் உடன்படிக்கை என்னை விட்டு நிலைபெயராமலுமிருக்கும். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் உமக்கே நன்றி. (1தீமோ 1:12, ஏசா 54:10)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]