CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தொலைக்காட்சி நேரம் ஜெப நேரமாயிற்று

தொலைக்காட்சி நேரம் ஜெப நேரமாயிற்று

“1958-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9-ம் தேதி என் வாழ்வில் மறக்க மடியாத நாள். ஏனெனில் அன்று இரவுதான் என் டெலிவிஷன் பெட்டியை விற்க முடிவு செய்தேன். அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. குவென்னும்(மனைவி) குழந்தைகளும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பளிச்சென்று தெரியும் பட்டாடை அணிந்த மங்கையர் நடந்து செல்லும் ஒரு அலுப்புத் தட்டும் காட்சியை ஒளிபரப்பியது.

ஒளிக்காட்சி காண்போரின் மனதைக் கவரும். அந்தப் பெண்ணின் உருவமோ அல்லது அலுப்புத்தட்டும் அவள் கதையோ என் உள்ளத்தைக் கவரவில்லை. எவ்வளவு முயன்றும் என் மனம் ஏனோ அதில் லயிக்கவே இல்லை. நான் சற்றென்று எழுந்து அந்த ஒளிக்காட்சியை நிறுத்தினேன். அந்த அழகிய பெண்கள் மறைந்தனர்.

நான் எழுந்து என் அலுவலக அறைக்குச் சென்று என் சுழல் நாற்காலியில் அமர்ந்தேன். சிந்தனை என் உள்த்தில் எழுந்தது. “ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நான் குறைந்தது இரண்டு மணி நேரம் ஒளிக்காட்சிக்கு செலவழித்து என் நேரத்தை வீணாக்குகிறேன். அந்த நேரத்தை உம்மோடு உறவாடும் ஜெப நேரமாக மாற்றினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? என்ற எண்ணம் அலை பாய்ந்தது. ஏன் இந்த எண்ணத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று சிந்தித்தேன். ஒரு நல்ல  முடிவாகத் தோன்றியது. அதே வேளையில் மற்றொரு எண்ணம் அதை எதிர்த்தது. ஒளிக்காட்சி பார்ப்பது இப்போதைய நாகரீக உலகின் ஓா் அம்சம் உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை மற்ற மக்கள் பார்ப்பது போல் நமக்கும் தெரிந்திருப்பது நல்லதுதானே என்றது உள்மனம். இப்படியாக சிந்தித்து சிந்தித்து என் மனம் அலுப்புற்றது.

திடீரென்று எழுந்து விளக்குகளை அணைத்தேன். ஜன்னல் அருகே நின்று தண்ணொளி பரப்பும் வெண்ணிலவைப் பாரத்துக்கொண்டே நின்றேன். ஓர் எண்ணம் பளிச்சிட்டது. மறுபடியும் ஆண்டவரோடு ஒரு பேரம் பேசினேன். ஒரு அடையாளம் அற்புதத்தைக் கேட்டேன்.

இம்முறை கேட்ட அடையாளம் சிறிது சிக்கலானதுதான். ஆனால், இது நிறைவேற்றினால் என் வாழ்க்கைப் பாதையே மாறிவிடும். இயேசுவே, இந்த முறையும் ஒரு முடிவெடுக்க உதவி செய்யும். ஒரு அற்புத அடையாளத்தைக் காட்டும். நான் பேப்பரில் விளம்பரம் போடப் போகிறேன், “ஒரு டி.வி. பெட்டி விற்பனைக்கு இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் வந்து பார்க்கலாம்” என்று. உமக்கு சித்தமானால் ஒரு அடையாளம் காட்டும், விளம்பரம் வெளியான அரைமணி நேரத்துக்குள் ஒருவர் அதை வாங்க வேண்டும். என்பது தான் நான் கேட்ட அடையாளம்.

காலையில் என் முடிவை குவெனிடம் சொன்னேன். அவள் சிரித்தாள். அதில் அவள் உற்சாகம் காட்டினதாகத் தோன்றவில்லை. “அரைமணி நேரத்திலா? உங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றாள். ஆனாலும் நான் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன்.

விளம்பரம் கொடுத்து விட்டு பதிலுக்காக, அடையாளத்துக்காகக் காத்திருந்தோம். அந்த அறையில் ஒரு விசித்திரமான பரபரப்பான சூழ்நிலை நிலவியது. நான் சோபாவில் அமர்ந்திருந்தேன். ஒளிக்காட்சிப்பெட்டி என்னையே முறைத்துப் பார்ப்பது போல் இருந்தது. மறுபக்கம் குவெனும்,என் பிள்ளைகளும் வேடிக்கையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானோ தொலைபேசியின் அருகில் வைத்திருந்த கடிகாரத்தை நோக்கிக் கொண்டு காத்திருந்தேன்.

நேரம் ஆயிற்று, 29 நிமிடங்கள் ஒடிவிட்டன. இன்னும் ஒரே ஒரு நிமிடம் தான் “குவென், நீ சொன்னது சரிதான், ஆனால் நான் நினைத்தது…” என்று சொல்லி வாய் மூடுவதற்குள் டெலிபோன் மணி அடித்தது. சோர்ந்த உள்ளத்தோடு பேச எடுத்தேன். “உங்களிடம் ஒரு டி.வி. பெட்டி விற்பனைக்கு இருக்கிறதா?” அடுத்து முனையிலிருந்து ஒருவர் கேட்டார். ஆம் உண்மைதான். அது ஒரு R.C.A மாடல். நல்ல நிலையில் உள்ளது. வாங்கி இரண்டு வருடங்கள் தான் ஆயிற்று என்று பதில் சொன்னேன்.

“என்ன விலை எதிர்ப்பார்க்கிறீர்கள்” என்று கேட்டார். “நூறு டாலர்கள்” எதிர்பாராத கேள்வி ஏதோ வாய்க்கு வந்த தொகையைச் சொன்னேன். “சரி, நான் அதை வாங்கிக் கொள்கிறேன்” என்ற உடனே பதில் சொன்னார். “அதைப் பார்க்காமலேயோ?” என்றேன். “தேவையில்லை, ரெடியாக வைத்திருங்கள். பதினைந்து நிமிடங்களில் பணத்துடன் வருகிறேன்” என்றார் அந்த மனிதர்.

என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாறுதல் அன்று ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் நடுராத்திரியில் தொலைக்காட்சி பார்ப்பதை விட்டு விட்டு என் அலுவலக அறையை அடைத்துக்கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நேரம் இழுத்துக்கொண்டு போவது போல் அலுப்புத் தட்டியது. அதற்கு முன் நான் வேதாகமத்தை முழுமையாக வாசித்ததில்லை. ஆனால் இப்போதோ ஒழுங்காக, முறையாக வாசிக்க ஆரம்பித்தேன். விண்ணப்ப ஜெபம், துதியின் ஜெபம், எவ்வளவு ஆனந்தமானது, வல்லமையானது என்பதை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் ஒரு புது அனுபவம் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 ஆத்துமாவே, ஏன் தயங்குகிறாய்? காத்திரு! (சங் 42:11)

கடிகாரத்தின் முள்ளை நீங்கள் திருப்பக்கூடும். ஆனால்    நேரத்தை மாற்றி விட உங்களுக்கு முடியாது. ஒரு ரோஜா    மொட்டு சீக்கிரமாக விரிந்து மலரும்படி செய்ய நீங்கள்  முயற்சி செய்தால், அதின் அழகு கெட்டுவிடும். தேவன் உங்களுக்காகச் செய்ய நினைத்திருப்பவைகளை சீக்கிரம் அடைய நினைத்து நீங்கள் கிரியை செய்வதனால், அதின்நேர்த்தியைக் கெடுக்கின்றீர்களே தவிர, தேவ சித்தம் நிறைவேற நீங்கள் உதவியாயிருப்பதில்லை. அவர் விருப்பப்படி ஏற்றவேளையில் செய்யும்படி விட்டுவிடுங்கள்.