CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நாவின் வன்மை

நாவின் வன்மை

நாவிற்கு உன்னை அழிப்பதற்கும், வாழ்விப்பதற்கும் வல்லமையுண்டு. ஒரே நாவிலிருந்து ஆசீர்வாதமும் சாபமும் வெளிவருகிறது. அவ்வாறிருக்கக் கூடாது. இயேசுவானவரின் வார்த்தைகள் மிகத்தெளிவாயிருக்கின்றன. “இதயத்தின் நிறைவால் வாய் பேசும்.”

உனது இதயம் வார்த்தைகளால் செயல்படுகிறது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் வருகிறது. பயம் பிசாசின் வார்த்தைகளைக் கேட்பதினால் வருகிறது. சில கிறிஸ்தவர்கள் தங்களது எதிரியாகிய பிசாசு சொல்லும் வார்த்தைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள்.

சரியான அறிவுள்ள எவனும் தன்னைப்பற்றி தன்னுடைய விரோதி சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் உன் எதிரியின் வார்த்தைகள் உனக்கு விரோதமாகச் சொல்லப்பட்டவை. உன்னைப்பற்றி உன் எதிரி சொல்வதெல்லாம் திருடன், பொய்யன், பாவி என்பதே. அதை நீ ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? உன் வார்த்தைகளைக்கொண்டு உன்னை பிடிக்க வேண்டுமென அவன் விரும்புகிறான். அதனால் உனக்குள் உன்னைப்பற்றி தகுதியற்ற அழிவையுண்டாக்கக்கூடிய எண்ணத்தை உண்டாக்க விரும்புகிறான். மத்தேயு 12:35-ல் “நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான்” என்று இயேசு கூறுகிறார். தேவன் செய்வார் என்று இயேசு கூறவில்லை. மனிதன்தான் அதைச் செய்கிறான். மூளையிலிருந்தல்ல – இருதயத்திலிருந்து. நல்லவையோ, கெட்டவையோ எல்லாம் இருதயத்திலிருந்து வாயின் வழியாய் வருகிறது என்று இயேசு சொன்னார்.

“வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். வாயிலிருந்து புறப்படுகிறவைகள் . இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்.”(மத் 15:11, 18-19)

மறுபடியும் பிறந்த ஆவி மனிதனைப்பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதில் பிசாசு அக்கரையாயிருக்கிறான். அப்படிப்பட்ட உண்மைகளில் சில இதோ:

நீ கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். அவருடைய கை வேலைப்பாடாயிருக்கிறாய். “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்துஇயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” (எபே 2:10) “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்.; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின”           (2 கொரி 5:17)

உன்னிலிருந்து பழையவைகள் போய்விட்டன. உன் ஆவியைப் பொருத்தவரை எல்லாம் புதிதாயின. இயேசுவானவருக்குள் நீ தேவ நீதியாகும்படிக்கு இயேசுவானவர் உனக்காகப் பாவமானார். (2 கொரி 5:21)

இயேசுகிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த நீங்கள் தேவனின் சுதந்தரரும், இயேசுகிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாயிருக்கிறீர்கள். (ரோமர் 8:17) நீ பயமின்றி குற்ற உணர்வின்றி பிதாவின் சமூகத்தில் தைரியமாக வரமுடியும். ஆவிக்குரிய மரணத்தையுண்டாகக்கூடிய பாவப்பிரமாணத்திலிருந்து நீ விடுதலை பெற்றிருக்கிறாய். (ரோமர் 8:1-2)

நீ தேவனுடைய பிள்ளையாகி அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்கு பெற்று அவரோடு ஐக்கியப்படும் படியான தகுதி பெற்றிருக்கிறாய்.

பிசாசானவன் தேவனோடு ஐக்கியம் கொள்ள முடியாது. அவன் செத்துப்போன ஆவி. மனிதனைப்போல அவன் தேவனோடு தொடர்புகொள்ள முடியாது. மறுபடியும் பிறந்த மனித ஆவி ஒரு உன்னதமான சிருஷ்டிப்பு. மனிதன் தேவனோடு ஐக்கியப்படவே உண்டாக்கப்பட்டான்..