CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் குணமும் நடக்கையும்

ஜெபமும் குணமும் நடக்கையும்

“ஜெனரல் சார்ல்ஸ் ஜேம்ஸ் கார்டன், கார்ட்டும் (khartum) நகரின் கதாநாயகன். உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ இராணுவ வீரன், சூடான நகரத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஒராண்டு வீரத்துடன் நின்று இறுதியில் மேற்கொள்ளப்பட்டு கொலையுண்டார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், அவருடைய நினைவிடத்தில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தம் பணத்தை ஏழைகளுக்கும், தம் இரக்கத்தைத் துயரப்படுகிறவர்களுக்கும், தம் வாழ்க்கையைத் தம் நாட்டுக்கும், தம்முடைய ஆத்துமாவைத் தேவனுக்கும் கொடுத்தார்.”

ஜெபம் ஒருவரது நடத்தையை ஒழுங்குப்படுத்துகிறது; நடத்தை குணத்தை உண்டாக்குகிறது. நாம் செய்யும் காரியம் நம் நடத்தையைக் குறிக்கும். நாம் எப்படிப்பட்டவர் என்பது நம்முடைய குணத்தால் அறியப்படும். நடத்தை வெளியரங்கமான வாழ்க்கை. ஆனாலும் அது வெளியில் தெரியும்படி சாட்சி கொடுக்கும் ஒன்றாகும். நடத்தை வெளியரங்கமானது. வெளியில் பார்க்கப்படுவது குணம் உள்ளானது, உள்ளுக்குள் செயல்படுவது. நடத்தை குணத்திலிருந்து பிறப்பது; குணம் இதயத்தின் நிலைப்பாடு; நடத்தை வெளியரங்கமான செயற்பாடு. குணம் மரத்தின் வேர், நடத்தை மரம் கொடுக்கும் கனி.

ஜெபம் கிருபையின் அனைத்தும் சம்பந்தப்பட்டது. குணத்துக்கும் நடத்தைக்கும் ஜெபத்தின் தொடர்பு ஒரு உதவியாளரைப் போன்றது. ஜெபம் குணத்தை நிலைநிறுத்தவும் நடத்தையை நன்கு அமைக்கவும் உதவுகிறது. இவ்விரண்டும் வெற்றி பெறுவதற்கு ஜெபத்தை சார்ந்திருக்கின்றன. நெறிசார்ந்த குணமும், நடத்தையும் ஜெபத்திலிருந்து ஒரளவுக்குத் தனித்துமிருக்கலாம். ஆனால் தெளிவாய்த் தெரிகிற மதசார்புள்ள குணமும் கிறிஸ்தவ நடத்தையும் ஜெபமில்லாமல் இருக்க முடியாது. மற்ற உபகரணங்களெல்லாம் தோற்றுப்போகும் போது ஜெபம் உதவி செய்கிறது. நாம் அதிகமாய் ஜெபிக்கும் பொழுது வாழ்க்கை மிகவும் நன்றாயிருக்கும்;  அது பரிசுத்தமாகவும் மேம்பட்டதாகவும் இருக்கும்.

கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி செய்கிற கிரியையின் நோக்கம் மதம்சார்ந்த குணத்தை உருவாக்குவதும் கிறிஸ்தவ நடத்தையை ஏற்படுத்துவதும்தான். “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியையைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாயும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” (தீத்து 2:14)

கிறிஸ்து ஏழைகளுக்காகத் தாராளமாக உதவி செய்வது, இரங்குவது ஆகிய கிரியைகளை மாத்திரமே தம்முடைய போதனைகளில் வலியுறுத்தாமல், உள்ளான ஆன்மீக குணத்தை வலியுறுத்துகிறார். இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

பவுலின் நிரூபங்களைப் படிக்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அது இருதயத்தின் பரிசுத்தம் மற்றது நீதியான வாழ்க்கையை வாழ்வது. தமது தனிப்பட்ட வேலையையோ அல்லது தயாளமாய் இருப்பதையோ முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும் என பவுல் கூறவில்லை. மனித இருதயத்தின் நிலை, சொந்த வாழ்க்கையில் குற்றமற்ற நிலை ஆகியவை பற்றியே பவுல் அப்போஸ்தலர் தம் நிரூபங்களில் எழுதினார்.

வேதாகமத்தில் வேறொரு இடத்திலும், குணமும் நடத்தையும் மற்றவைகளைக்காட்டிலும் ஒப்புயர்வற்றதாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆன்மீக நற்குணம், வாழ்வில் தூய்மை ஆகியவை இல்லாத மனிதர்களை மாற்றியமைப்பதில் கிறிஸ்தவ மார்க்கம் ஈடுபடுகிறது. அவர்கள் இதயத்தில் தூய்மையோடும் வாழ்வில் நேர்மையாகவும் இருக்க அது நாடுகிறது. அது தீயமனிதர்களை நல்ல மனிதர்களாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. உள்ளான தீய காரியங்களை நல்லவைகளாக மாற்ற முயற்சிக்கிறது. இங்குதான் ஜெபம் உள்ளே வந்து அதனுடைய ஆச்சரியமான ஆற்றலையும் பலனையும் காட்டுகிறது. இந்தக் குறிப்பிட்ட முடிவை நோக்கி ஜெபம் செல்லுகிறது. உண்மையிலேயே ஜெபம் இல்லாமல் குணநலன்களில் இயற்கைக்கப்பாற்பட்ட மாற்றத்தை ஒருபோதும் அடையமுடியாது. தீய நிலையிலிருந்து நல்லநிலைக்கான மாற்றம் “…..நம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம்….” வரப்பெறாமல் தேவனுடைய இரக்கத்தின் படி ”….மறுஜென்ம முழுக்கினால்….” நம்மை இரட்சிக்கிறது (தீத்து 3:5) இந்த ஆச்சரியமான மாறுதல் அக்கரையுள்ள, விடாப்பிடியான, உண்மையுள்ள ஜெபத்தின் மூலம் ஏற்படுகிறது. மனித இதயத்தில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த வகையான கிறிஸ்தவமும் தவறான வழிகாட்டுதலும் கண்ணியும் ஆகும்.

மனிதனுடைய குணத்தையும் நடத்தையையும் மாற்றுவது ஜெபத்தின் பணியாகும். ஜெபத்தினால் எத்தனையோ வாழ்க்கைகள் மாறியுள்ளன. இந்த இடத்தில் ஜெபம் தன்னுடைய நம்பிக்கைக்குரிய சான்றுகளின் மூலம் தன்னுடைய தெய்வீகத்தை மெய்ப்பித்திருக்கிறது.

ஜெபம் இதைச் செய்யவேண்டியிருப்பது போல, தீய மனிதர்களை அணுகி அவர்களை நல்லவர்களாக மாறச்செய்வது சபையின் முக்கிய பணியாகும். மனிதனுடைய குணத்தில் புரட்சியை உண்டாக்கும்படி மனித இயல்பை மாற்றுவதும், நடத்தையைத் நல்வழிப்படுத்துவதும் சபையின் மிஷனெரிப் பணியாகும். சபை ஒழுக்க நெறியுள்ளது என்று கருதப்படுகின்றது. மனிதர்களை ஒழுக்க நெறியாளராக மாற்றுவதில் அது ஈடுபடவேண்டும். சபை பூமியில் தேவனுடைய தொழிற்சாலையாகும். ஒழுக்கநெறியான குணத்தை உண்டாக்குவதும் ஊக்குவிப்பதும் அதனுடைய முக்கிய பணியாகும். இது அதனுடைய முதல் பணியாகும். சபைக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதும், அதை அதிகமாக்குவதும் அல்லது அவர்களிடமிருந்து பணம் பெறுவதும், தர்ம காரியங்களில் ஈடுபடுவதும், இரக்கம் பாராட்டுவதும் அதனுடைய அடிப்படைப் பணியல்ல. ஒழுக்கமுள்ள குணத்தையும் வெளிரங்கமான தூய வாழ்க்கையையும் உண்டாக்குவதுதான் சபையின் அடிப்படையான பணியாகும்.